முந்திரி வியாபாரியை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளை
பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை தாக்கி அவரிடம் இருந்த 5 லட்ச ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ளது புறங்கனியைச் சேர்ந்தவர் சூடாமணி (52), முந்திரி வியாபாரி.
இவர் சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு முந்திரி விற்று வருகிறார். வாரா வாரம் சனிக்கிழமை சென்னை சென்று பணம் வசூலித்து வருவார். அதேபோல கடந்த நேற்று முன்தினம் வியாபாரிகளிடம் இருந்து ரூ. 5.05 லட்சத்தை வசூலித்துக் கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
நேற்று காலை காடாம்புலியூரில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் சூடாமணியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த சூடாமணி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications