மீண்டும் வன்முறை: கந்தமாலில் சிஆர்பிஎப் காவலர் கொலை
கந்தமால்: கந்தமாலில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஜவான் ஒருவரை கிராம மக்கள் வெட்டி கொலை செய்தனர். இதனால் ஒரிஸ்ஸாவில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதக் கலவரம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக கந்தமால் மாவட்டத்தில் நடந்து வரும் இந்து-கிருஸ்துவர் மத மோதல்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அங்கு சற்று அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் கந்தமாலில் சிஆர்பிஎப் ஜவான் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிஆர்பிஎப்பின் 175 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பக்ஷிஷ் சிங் கெளஹாத்தியில் இருந்து பாதுகாப்பு பணிக்காக கந்தமாலுக்கு வந்தார்.
ராய்கியா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, கிராம மக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த மற்றொருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார்.
கந்தமாலில் அமைதி திரும்பி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிஆர்பிஎப் டிஐஜி பி.கே.காமத் கூறுகையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக ஜவான் பக்ஷிஷ் சிங் கொலை செய்யப்படவில்லை. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கொலை செய்துவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.