நாட்டை அச்சுறுத்தும் மதக்கலவரங்கள்: கருணாநிதி

டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, முதல்வர் கருணாநிதியின் உரையை வாசித்தார். உரையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
தீவிரவாதிகள் மற்றும் வன்முறையாளர்களை ஒடுக்க தனி போலீஸ் படையை ஏற்படுத்த வேண்டும். மேலும் மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகளை வலுப்படுத்த வேண்டும். உளவுத் துறைகென்று நவீன கருவிகள், பாதுகாப்பு சாதனங்கள் போன்றவை வழங்கி வலுப்படுத்த வேண்டும்.
மத்திய போலீஸ் படை மற்றும் ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையங்களில் மாநில போலீஸாருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பயிற்சி மையங்கள் மூலமும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நவீன கருவிகளை கையாள போலீஸார் தெரிந்து கொள்ள முடியும்.
இலங்கையை ஒட்டிய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நதிநீர் - தேசிய தீர்வு:
மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த பிரச்சனையில் சில மாநிலங்கள் சுயநலத்துடன் செயல்படுகின்றன. மேலும் போராட்டங்களையும் நடத்துகின்றன. இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று கூறத்தேவையில்லை.
இந்த பிரச்சனைக்கு தேசிய அளவில் தீர்வு காணாவிட்டால் எதிர்காலத்தில் தேசிய நலனை இது பாதிக்கும். மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும். அத்துடன் தேசிய நதிநீர் ஆணையம் மூலமும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைக்களுக்கு சுமூக தீர்வு ஏற்படும்.
மதக்கலவரங்கள் நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. தமிழகத்தில் மத நல்லிணக்கம் எப்போதும் சிறப்பாக உள்ளது.
இதற்கு சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளே காரணம்.
அவர்கள் அனைத்து துறைகளிலும் சமமான வாய்ப்புகளை பெற மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதில் கிரீமி லேயர் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications