இலங்கை: 76 புலிகள் பலி-2 லட்சம் தமிழர்கள் பரிதவிப்பு
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் தீவிர சண்டையில் 76 புலிகளும் 9 ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவமும் விமானப் படையும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த 3 நாட்களாக ஹெலிகாப்டர்கள் மற்றும் தரை வழியே நடத்தப்பட்ட தாக்குதல்களில் புலிகள் தரப்பில் 76 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று வட பகுதியில் உள்ள புலிகளின் அரண்கள் மீது ராணுவமும் விமானப்படையும் தாக்குதல்களை நடத்தின. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் புலிகளின் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது 15 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ராணுவ துருப்புகள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் 4 புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் பாதுகாப்பு துறை தெரிவிக்கிறது.
அதேபோல முல்லைத்தீவிலும் கடும் சண்டை நடந்தது. இதில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகள் தரப்பில் இருந்து உறுதிபடுத்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் முழுமையானதாக இல்லை. உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
2 லட்சம் தமிழர்கள் பரிதவிப்பு:
போர் காரணமாக உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள சுமார் 2 லட்சம் தமிழர்கள் போக்குவரத்து வசதி மற்றும் எரிபொருள் இல்லாததால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் சர்வதேச நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு, இருப்பிடமின்றி தவித்து வரும் தமிழர்கள் சாலையோரங்களிலும், வெட்ட வெளிகளிலும் வசித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி மற்றும் எரிபொருள் இல்லாததால் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சியில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்துச் செல்வதற்கு டிராக்டருக்கு ரூ.12,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்காக தமிழ் மக்கள் நகைகளை அடகு வைத்து வண்டி வாடகை செலுத்தி இடம் பெயர்ந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் தனது மாதாந்திர அறிக்கையில் தமிழர்கள் பலர் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இடம் பெயர்ந்து வருவதாகவும், அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.