மலேரியா மாத்திரை-மாணவன் பலி: ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
நெல்லை: பள்ளியில் வழங்கப்பட்ட மலேரியா மாத்திரையை சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை உள்பட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகிலுள்ள வடக்கு பூலங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 15 பேருக்கு கடந்த 10ம் தேதி நல்வாழ்வுத் துறையினர் மலேரியா காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர்.
தினமும் ஒரு மாத்திரை சாப்பிட அறிவுறுத்தப்பட்டு மாணவர்களுக்கு தலா 10 மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவன் செல்வகுமார் திடீரென இறந்தான். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது.
விசாரணையில் அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதால் செல்வகுமார் இறந்தது தெரியவந்தது. அதிக மாத்திரைகள் வழங்கியது தொடர்பாக பாவூர்சத்திரம் சுகாதார ஆய்வாளர் ராஜநயினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் இவாஞ்சலின் கரிசலூர் பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர்கள் பிரபாகரன் நாயர், ஆண்டாள், முருகேசன் ஆகியோருக்கு அருகிலுள்ள பள்ளிக்கு மாற்றுப்பணி (டெபுடேஷன்) வழங்கப்பட்டது.
இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் மாரியப்பன் கூறுகையில், முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் மாற்று பணி வழங்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications