'ஈழத் தமிழர்'-சேலம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
சேலம்: ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து சேலம் மத்திய சிறையில் 812 கைதிகள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சிறைக்கு வெளியே நக்ஸலைட் அமைப்பினர் விடுத்த கோரிக்கையின்படி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தர்மபுரியைச் சேர்ந்த நக்ஸல் அமைப்பினர் சேலத்தில் நேற்று முன் தினம் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போஸ்டரை அச்சடித்த அச்சகத்தின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. போஸ்டரில் மக்கள் ஜனநாயக இளைஞர் அணி,
மக்கள் ஜனநாயக மாணவர் சங்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில், ஈழத் தமிழர்கள் மீதான இனவெறி தாக்குதலை தடுத்த நிறுத்த வேண்டும், இந்திய அரசு அளித்து வரும் ராணுவ பயிற்சி, ரேடார் பயிற்சிகளை தடுத்த நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறை அறைகள் திறக்கப்பட்டன. கைதிகள் குளித்து முடித்தனர். 6 மணிக்கு சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் 7 மணிவரை கைதிகள் சாப்பிட வரவில்லை. சில மணி நேரம் கழித்து சில கைதிகள் மட்டும் வந்து சாப்பிட்டு சென்றனர்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள், சிறை அறைகளுக்குச் சென்று கைதிகளை சாப்பிட அழைத்தனர். ஆனால் யாரும் சாப்பிட வரவில்லை.
இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாகவும், மத்திய அரசு தலையிட்டு தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் கோரினர்.
சேலம் சிறையில் 1189 விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 812 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். தகவலறிந்த சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆனந்தம் விரைந்து வந்தார்.
அவரும், ஜெயிலர் முருகன் மற்றும் காவலர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கைதிகள் மறுத்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.
சேலம மத்திய சிறையில் சிறை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷ்டி மோதல் காரணங்களாலும் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பது வழக்கமான ஒன்று.
ஆனால், இந்த முறை சிறைக்கு வெளியில் நக்ஸ்ல் அமைப்பினர் அறிவித்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து கைதிகள் சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இது சிறை நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications