For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் போராட்டம்-ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரியும், அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தனர்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கியமாக சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரிகளில் கமிஷனர் சேகர் உத்தரவின் பேரில் இணை போலீஸ் கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், குணசீலன் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் திருமலை தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இலங்கை அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்தனர்.

போலீசாருடன் மோதல்:

போராட்டத்தில் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கையில் கண்டன வாசகங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொடும்பாவி எரிப்பு:

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பல்கலை வளாகத்திற்குள் அங்கும், இங்கும் சுற்றியபடி கண்டன கோஷமிட்டனர்.

அப்போது திடீரென்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இதைபார்த்த போலீசார் ஓடிவந்து தண்ணீர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

போராட்டத்தின்போது, இந்திய அரசே இலங்கையில் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு வழங்கும் ராணுவ உதவியை உடனே நிறுத்த வேண்டும்,

ஈழ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சுமார் 2 மணி நேரம் ஆவேசமாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

தேர்வுகள் தள்ளி வைப்பு:

அதே போல மாநில கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் இன்று நடக்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

கல்லூரி வளாகத்தில் இலங்கை ராணுவத்தையும், அதிபர் ராஜபக்சேவையும் கடுமையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X