பெப்சி நிறுவனத்திலிருந்து 3,300 பணியாளர்கள் நீக்கம்!
உலகின் முதல் நிலை குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பெப்சிகோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம், முன்பைவிட 9.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.
குறிப்பாக இந்தியாவைச் (சென்னை) சேர்ந்த இந்திரா நூயி பெப்சிகோ தலைவரான பிறகு லாப அளவு அதிகரிக்காமல் குறைந்த வண்ணம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்து. அமெரிக்காவில் பெப்சியின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாகவும் பெப்சி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய காலாண்டின் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் கணிசமான பணியாளர்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்த பெப்சி நிர்வாகம் நேற்று அதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பெப்சி தலைவர் இந்திரா நூயி கூறுகையில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பெப்சி நிறுவன தயாரிப்புகளின் விற்பனையிலும் எதிரொலித்துள்ளன. சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பெப்சி நிர்வாகம் எடுத்துள்ள சில முடிவுகளுள் இதுவும் ஒன்று..., எனக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டாவது காலாண்டில் பெப்சியின் நிகர வருமானம் 1.74 பில்லியன் டாலர்கள். ஆனால் இந்த காலாண்டில் அது 1.58 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது. அடுத்த காலாண்டில் இந்த வருவாய் அளவு மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதாலேயே, பெப்சி இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது.
மேலும் சில சிக்கன நடவடிக்கைகளை பெப்சி நிர்வாகம் அறிவிக்க உள்ளது.