பொருளாதார நெருக்கடி: ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்க பிரதமர் உத்தரவு
டெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வழிகள் குறித்து நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளின் ரொக்கப் புழக்கத்தைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை நெறிப்படுத்தியுள்ளார் மன்மோகன் சிங்.
நாட்டில் ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி சில யோசனைகளை பிரதமரிடம் வைத்துள்ளது.
ரொக்க இருப்பு, வங்கி வட்டி மற்றும் குறுகிய கால வங்கி முதலீடுகளின் மீதான வட்டி போன்றவற்றை இன்னும் குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்தபிறகு நிருபர்களைச் சந்தித்த நிதியமைச்சர், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஆபத்து இல்லை. விரைவில் சகஜ நிலை திரும்பி விடும் என்றார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறுகையில், என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிலைமை முழுவதுமாக நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எந்த பொருளாதாரக் குழப்பமோ குளறுபடியோ இல்லை என்றார்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டம் நிதித்துறைச் செயலாளர் அருண் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்தே வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதமான சிஆர்ஆர்-யை குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை இது. இதை 1 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளில் மேலும் ரூ.40,000 கோடி ரூபாய் ரொக்கம் கையாளப்படும். இந்தத் தொகை சந்தைக்கு வரும் என்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
கூட்டலும் குறைத்தலும்!:
கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாகக் கூறி ரொக்க இருப்பு விகிதம், வங்கி வட்டி விகிதங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்த்திய ரிசர்வ் வங்கி, ரொக்கப் புழக்கத்தை அடியோடு் கட்டுப்படுத்த முயன்றது.
தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் அவற்றைக் குறைத்துள்ளதோடு, கூடுதலாக குறுகிய காலக் கடன்களையும் வங்கிகளுக்கு வழங்கி வருகின்றன ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும்.