அபாய நிலையில் உலக பங்குச் சந்தைகள்!
நியூயார்க்: உலக பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்தே எங்கும் 'சிவப்பு' மயம்தான்.
இரண்டு தினங்களுக்கு முன் ஓகோவென்று கொடிகட்டிப் பறந்த டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையில் இன்று மிக மோசமான சூழல் நிலவியது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகளின் விலை சரிந்தது. பங்குச் சந்தை புள்ளிகளும் கிடுகிடுவென குறைந்து முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பை அதிகரித்துள்ளது.
டோவ் ஜோன்ஸில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களுக்குள் 700 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் 733 புள்ளிகள் சரிந்து (7.87 சதவிகிதம்) 8,577.91-ல் நிலைபெற்றது.
1987, அக்டோபர் 26-ம் தேதிக்குப் பிறகு இவ்வளவு மோசமான வர்த்தகத்தை இப்போதுதான் சந்திக்கிறது டோவ் ஜோன்ஸ்.
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அரசே ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையும் சரிவுக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிக்கி அவுட்!
ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தை நிக்கியிலும் (ஜப்பான்) இன்று சிவப்பு மயம்தான். 986 புள்ளிகள் சரிந்து 8562 புள்ளிக்கு வந்துவிட்டது. உலகப் பொருளாதார சரிவின் பலனை இப்போது நாங்களும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் அந்நாட்டு பொருளியல் நிபுணர்கள் சலித்துப்போய்.
லத்தீன் அமெரிக்காவின் இபோவ்ஸ்பா பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் 11.4 சதவிகிதம் அதாவது 3500 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது.
மெக்ஸிகோ, அர்ஜன்டைனா போன்ற நாடுகளின் சந்தைகளிலும் இன்று கடும் சரிவு ஏற்பட்டது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்க் செங் கடும் சரிவுக்குள்ளானது. இன்று ஒரே நாளில் 834 புள்ளிகள் சரிந்தன. தென் கொரியா, சீனா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இன்று இதே நிலை நீடித்தது.












Click it and Unblock the Notifications