ரேபரேலி தொகுதிக்குள் நுழைய தடையா?-மாயாவதி பதிலடி
லக்னோ: ரேபரேலி ரயில் கோச் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெற்ற விவகாரத்தை வைத்து சோனியா காந்தி அரசியல் செய்கிறார். வருகிற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அவர் மேற்கொண்டிருக்கும் அரசியல் சதி இது என்று குற்றம் சாட்டியுள்ளார் உபி முதல்வர் மாயாவதி.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சொந்த தொகுதி. அங்கு ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் பூமி பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சோனியா ஆவேசம்:
முன்னதாக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்டு இருந்த நில ஒதுக்கீட்டை முதல்வர் மாயாவதி ரத்து செய்தார்.
இந்த வழக்கில் பூமி பூஜைக்கு கோர்ட்டும் தடை விதித்து இருந்தது. அத்துடன், பதட்ட நிலை காரணமாக ரெயில் பெட்டி தொழிற்சாலை அமையும் பகுதியான லால்கஞ்ச் நகரில் மாநில அரசு சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பூமி பூஜை ரத்து செய்யப்பட்டாலும், திட்டமிட்டபடி சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்கு சோனியாவை திரளான தொண்டர்கள் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய சோனியா, எனது தாய்வீடு ரேபரேலி. இதில் நுழைவதற்கு தடை விதிப்பதா? என்றார் ஆவேசமாக. ரேபரேலி தொகுதி மக்களின் நன்மைக்காக ஜெயிலுக்கு செல்லவும் தயார் என்று சோனியா அறிவித்தார்.
மாயாவதி பதிலடி:
இந்நிலையில், சோனியாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் மாயாவதி. அவர் கூறியதாவது:
ரயில் பெட்டி தொழிற்சாலை அமைய இருந்த லால்கஞ்ச் நகரில் பதட்ட நிலை இருந்ததால் அங்கு மட்டும் தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஏதோ அவரை ரேபரேலி தொகுதிக்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டது போல் சோனியா நாடகம் ஆடுகிறார். இது வெறும் அரசியல் ஸ்டன்ட்.
ஜெயிலுக்கு போகத் தயார் என்று சோனியா அறிவித்து இருக்கிறார். மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறி இருக்கும். அவருடைய சாலையோர சுற்றுப் பயணத்தை தடுத்து சோனியாவை கைது செய்து இருக்க முடியும்.
ஆனால், பதட்ட நிலை இருப்பதால் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று மட்டுமே சோனியாவிடம் கேட்டுக்கொண்டோம். அந்த மாவட்டத்தின் வேறு எந்த பகுதியிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், காங்கிரசார் வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதை முறியடிக்க ரேபரேலியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசப் போகிறேன்.
உண்மையிலேயே உபி மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் சோனியாவுக்கோ அவரது தலையிலான காங்கிரஸ் அரசுக்கோ இருந்தால் ஒட்டுமொத்த உபி மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கிழக்கு உபியிலோ, புந்தேல்கண்டிலோ இம்மாதிரி தொழிற்சாலைகளைக் கொண்டு வரலாமே.
இந்த ரயில்பெட்டி தொழிற்சாலை எப்போதோ இங்கு வந்திருக்க வேண்டும். ரேபரேலி திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட சாப்ரா உள்பட மற்ற தொழிற்சாலைகளில் எல்லாம் முன்னதாகவே பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பாராளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் லாபம் கருதி இப்போது பூமி பூஜை நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.
மேலும் ரேபரேலி மற்றும் ராகுல் தொகுதியான அமேதி ஆகிய இரு தொகுதிகளின் நலன் மட்டுமே சோனியாவுக்கு முக்கியமாக தெரிகிறது. மற்ற தொகுதிகளை பற்றி அவருக்கு கவலை இல்லை. இது அவரது திட்டமிட்ட அரசியல் சதி, என குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications