மூன்றே நாளில் பாஸ்போர்ட்: புதிய சாப்ட்வேர் தருகிறது டிசிஎஸ்!
சென்னை: விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் புதிய புராஜக்ட் சாப்ட்வேரை உருவாக்க மத்திய அரசு, டி.சி.எஸ். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே போல ஒரே நாளில் தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெறும் புதிய நடைமுறையை உருவாக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் வழங்க டாடா கன்சல்டன்சி நிறுவனத்துக்கு 345 மையங்கள் உள்ளன.
இந்த எண்ணிக்கையை 1,250 ஆக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாஸ்போர்ட் சேவா திட்டத்தை டி.எஸ்.சி உதவியுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின்படி போலீசாரின் ஆய்வுப்பணி முடிந்ததும் மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். தத்கலில் பாஸ்போர்ட் ஒரே நாளில் வழங்கப்படும். போலீசார் தங்கள் ஆய்வுப் பணி முடித்து பரிந்துரையை ஆன்-லைன் வாயிலாக பாஸ்போர்ட் அலுவலகம் அனுப்ப வசதிகள் செய்து தரப்படும்.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக 77 புதிய பாஸ்போர்ட் சேவா மையங்களை நாடு முழுவதும் 2010-க்குள் அமைக்க இருக்கிறது டிசிஎஸ். முதல்கட்டமாக இந்தாண்டு இம்மையம் பெங்களூரிலும், அடுத்த வருடம் ஜுன் மாதம் சண்டிகரிலும் அமைக்கப்படுகிறது.