ரயில் இ-டிக்கெட்: அடையாள அட்டை விதி தளர்வு
டெல்லி: ரயில்களில் இ-டிக்கெட் மூலம் முன் பதிவு செய்த பயணிகள், பயணத்தின்போது குறிப்பிட்ட அடையாள அட்டையைத் தான் காட்ட வேண்டும் என்ற விதியை ரயில்வேத் துறை தளர்த்தியுள்ளது.
இன்டர்நெட் மூலம் ஆன் லைனில் இ-டிக்கெட் புக் செய்யும்போது பேன் கார்ட், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசால் தரப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு, இ-டிக்கெட் வாங்கலாம்.
இதில் எந்த அட்டையை பயணி குறிப்பிட்டாரோ அதே அடையாள அட்டையைத் தான் பயணத்தின்போது காட்ட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிக்கெட் வாங்கும்போது குறிப்பிட்ட அட்டையைத் தான் கட்டாயம் பயணத்தின்போது காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே போதும் என ரயில்வே அறிவித்துள்ளது.
பயணத்தின்போது மத்திய, மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைக் காட்டலாம். டிக்கெட் வாங்கும்போது குறிப்பிட்ட அட்டையைத் தான் காட்ட வேண்டும் என்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா சைட் பெர்த்தால் தொந்தரவு:
இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள சைடு பெர்த்தால் (படுக்கைகள்) பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
2ம் வகுப்பு பெட்டிகளில் சைட் பெர்த் முதலில் கீழே ஒன்று, மேலே ஒன்று என இரண்டு தான் இருந்தன. ஆனால், இதை 3 பெர்த்களாக மாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே ரயிலின் பக்கவாட்டில் உயரம் கம்மி. இதில் 3 பெர்த் இருப்பதால் பயணிகள் கொஞ்சம் கூட அசைய இடமில்லாமல் ஒருவருக்கு மேல் ஒருவர் என அடுக்கப்படுகின்றனர்.
இதற்கு பயணிகளிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.