கிணற்றில் விழுந்த கார்-வாலிபர் பலி
சேலம்: தறிகெட்டு ஓடிய கார் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற வாலிபர் இறந்தார். 13 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
சேலம் குமாரசாமிப்பட்டியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் ராதாகிருஷ்ணனின் மகன் விஸ்வநாதன் (23). இவர் நிதி நிறுவனங்களுக்கு பணம் கட்டாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் பறிமுதல் செய்யப்படும் கார்களின் கன்டிஷனை ஆய்வு செய்யும் பணி செய்து வந்தார்.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ராமன் குட்டை பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் ஒன்றை மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்யும் பணியில் விஸ்வநாதன் ஈடுபட்டார்.
மாலை 6 மணிக்கு காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அங்கிருந்த 60 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்தது.
கார் நீரில் மூழ்கியது. தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவாகிவிட்டத்தால் மின் விளக்கு வெளிச்சத்தில் கிரேன் மூலம் காரை மேலே தூக்கும் முயற்சிகள் நடந்துக் கொண்டிருந்தது. மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தன.
சுமார் 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிரேன் மூலம் கார் வெளியே கொண்டுவரப்பட்டது. காரின் அனைத்து கண்ணாடிகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
கார் கதவை திறந்தபோது உள்ளே விஸ்வநாதன் உடல் இல்லை. காரின் முன்பக்க கண்ணாடி மட்டும் உடைப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது கிணற்றின் அடியில் அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்தது. ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.