பிரதமருடன் தொலைபேசியில் ராஜபக்சே பேச்சு
அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது நடக்கும் தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனைத் தடுக்கக் கோரியும், இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரியும் தமிழகமே போர்க் கோலம் பூண்டு நிற்கிறது. தமிழக எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை தமிழக அரசும், பிற அமைப்புகளும் அறிவித்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு தனது நாட்டின் நிலைமை குறித்து விளக்கினார்.
அப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் குறிப்பிட்டு, உடனடியாக ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு, உடனடியாக சுமுக தீர்வுக்கு முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் அவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.