கருணா கோஷ்டியில் மோதல்-ராணுவம் சமரசம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று தனி கோஷ்டியாக செயல்பட்டு வருபவர் முரளீதரன் என்ற கருணா. ராணுவ உதவியோடு செயல்பட்டு வரும் இவரது கோஷ்டி மீது புலிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தங்களது உறுதுணையாக உள்ள கருணாவுக்கு எம்.பி பதவி அளித்துள்ளா அதிபர் ராஜபக்சே. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே கருணா கோஷ்டியிலும் சில காலத்துக்கு முன் பிளவு ஏற்பட்டது. பிள்ளையன் என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டி உருவாகி கருணாவுக்கு எதிராக செயல்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் கருணா கோஷ்டிக்கும் பிள்ளையன் கோஷ்டிக்கும் இடையே நேற்று மட்டக்களப்பு நகரில் கடும் மோதல் ஏற்பட்டது.
பிள்ளையன் கோஷ்டியினரின் அச்சு அலுவலகத்தை கருணா கோஷ்டி சூறையாடியதோடு பிள்ளையனை கொல்லவும் முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.
அதே நேரத்தில் பிள்ளையன் கோஷ்டியைச் சேர்ந்த 13 பேரை கருணா கோஷ்டியினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இலங்கை போலீசார் ராணுவ உதவியோடு இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.