இலங்கை நிலைமையை ஆராய நேரில் செல்கிறார் பிரணாப் முகர்ஜி!
இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கை பிரச்சனைக்கு சமரச தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டதோடு, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். இதுகுறித்து நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது பிரதமர் அலுவலகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தற்போதைய நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் இலங்கைக்குப் பயணமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்சே உறுதி!
இந்நிலையில், இலங்கை தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.