இலங்கை தூதரகம் முன் போராட்டம்: மீனவர்கள் கைது
சென்னை: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியுள்ளனர். இதை கண்டித்து அரசியல் கட்சியினர், மீனவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர் முன்னேற்ற சங்கம், தென் இந்திய மீனவர் நலச் சங்கம் மற்றும் மீனவ அமைப்புகள் ஒன்று திரண்டு மீனவ போராட்ட குழு என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.
மீனவர் மீதான தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்த அமைப்பு அறிவித்தது.
அதன்படி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாப்பூர் துணைக் கமிஷனர் மௌரியா தலைமையிலான போலீசார் மீனவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications