சர்வதேச நெருக்கடி: இந்திய பிபிஓ துறை கடும் பாதிப்பு
வாஷிங்டன்: நான் ஆட்சிக்கு வந்தால் பிபிஓ எனப்படும் அவுட்சோர்ஸிங் பணிகள் இந்தியாவுக்கு செல்வதைத் தடுப்பேன், அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்க முன்னுரிமை அளிப்பேன் என்று அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க நிதி நிலை போகிற போக்கைப் பார்த்தால் அதற்கெல்லாம் அவசியமே இருக்காது போலிருக்கிறது. ஒபாமாவின் விருப்பம் இப்போதே நிறைவேறிய மாதிரிதான்.
சரியாக ஒரு வருடத்திக்கு முன்பு இந்திய பிபிஓ துறை பெற்றிருந்த வளர்ச்சி மூக்கின் மேல் விரலை வைக்க வைத்து விட்டது பல அமெரிக்க நிறுவனங்களையும். ஆனால் அமெரிக்க நிதித் துறை சந்தித்து வரலாறு காணாத வீழ்ச்சி பிபிஓ எனும் கான்செப்டையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.
இந்த வேலைகளை எதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குத் தர வேண்டும்... நாமே அந்த வேலைகளைச் செய்வோம் என ஒபாமா போன்றவர்கள் குரல் எழுப்பியது, இந்தத் துறை மூலம் பெருகும் வருவாயைப் பார்த்துதான்.
கடந்த ஆண்டு பிபிஓ துறையின் வளர்ச்சி 30 சதவிகிதத்துக்கும் மேல். இந்த ஆண்டு இப்போதே 20 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. இந்த நிதி ஆண்டின் முடிவில் 10 சதவிகித வளர்ச்சியாவது இருக்குமா அல்லது எதிர்மறையாகப் போய்விடுமா தெரியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது நாஸ்காம்.
சத்யம், விப்ரோ, இன்போஸிஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கை பிபிஓ மூலம்தான் பெற்றன. எனவே இதன் விரிவாக்கப் பணிகளுக்காக பெரிய அளவில் முதலீடு செய்யத் தயாராக இருந்தன.
ஆனால் தற்போது நிலவும் மோசமான சூழலைப் பார்த்தபிறகு, அனைத்து விரிவாக்கப் பணிகளையும் கைவிட்டு விட்டன, இந் நிறுவனங்கள்.
அதே போல ஐடி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதையும் அடியோடு நிறுத்தி வைத்துள்ளன பன்னாட்டு நிறுவனங்கள்.
'ஒரு பக்கம் இருக்கிற பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதும், மறுபுறம் புதிய பணியாளர் தேர்வு நிறுத்தமும்தான் இன்றைய சர்வதேச சூழல். இதனைப் புரிந்து மாற்றுப் பணிகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டுள்ளது நாஸ்காம்.