வட மாநில மாணவர்கள் மீது ராஜ்தாக்கரே கட்சியினர் கடும தாக்குதல்
மும்பை: மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த வடமாநில மாணவர்கள் மீது ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் கட்சினர் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். அவர்களை தேர்வு எழுத முடியாமல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் வடமாநிலத்தவர் மீது வன்மாக செயல்பட்டு வருகிறது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி. மகாராஷ்டிர மக்களுக்குத்தான் அனைத்து துறைகளிலும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தர வேண்டும் வேறு மாநிலத்தினருக்கு அரசு பணிகளை வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர்களை சீண்டி வம்பிழுத்து வந்த எம்என்எஸ் கட்சி நேற்று வடமாநில மாணவர்கள் மீது தனது வன்முறையை ஏவியது. மும்பையின் பல்வேறு இடங்களில் ரயில்வே பணிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது.
இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தேர்வு அறைகளுக்குள் திடீரென்று புகுந்த எம்என்எஸ் கட்சியினர் வடமாநில மாணவர்களின் ஹாலி டிக்கெட், விடைத்தாள்களை கிழித்து எறிந்தனர்.
தானே, நாலாசோப்ரா, கல்யாண், அந்தேரி உள்பட 13 இடங்களில் தேர்வு மையங்களில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். மாணவர்களை அடித்த விரட்டினர். அங்கிருந்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களம்போல காட்சியளித்தது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட எம்என்எஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஷிஷிர் ஷிண்டே கூறுகையில், ரயில்வே துறை பணிகளுக்கு மகாராஷ்டிர மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் வெளி மாநிலத்தவர்களை தேர்வு செய்வதை கண்டித்து போராட்டம் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.
ராஜ் தாக்கரே பைத்தியம்: லாலு கண்டனம்:
இந்த தாக்குதலுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது
தாக்குதலில் ஈடுபட்ட எம்என்எஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமஎன்எஸ் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஒரு பைத்தியம். உச்சநீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கிறார். சம்பவம் குறித்து மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் பேசினேன். விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். எம்என்எஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்.