பெரும் நஷ்டத்தில் ஐஎன்ஜி வங்கி!
லண்டன்: நெதர்லாந்து நாட்டின் மிகப் பிரபலமான வங்கியான ஐஎன்ஜி முதல்முறையாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
உலகில் இப்போது நிலவும் பெருமந்தம் காரணமாக பல நாடுகளின் நிதி அமைப்புகளும் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்து வருகின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் இதேநிலைதான்.
இங்கிலாந்தின் பல வங்கிகள் திவாலாகும் கட்டத்தில் நிற்கின்றன. அரசு அவற்றுக்கு 'பெய்ல் அவுட்' கொடுத்து கைதூக்கப் பார்க்கிறது. முடியாவிட்டால் அரசுடைமையாக்கி 'பார்ட் பார்ட்'டாக விற்றுவிட முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் அரசு!
ஐஸ்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த வங்கித் துறையே ஆட்டம் கண்டுவிட்டது.
இப்போது நெதர்லாந்து நாட்டின் ஐஎன்ஜியும் நஷ்டத்தில் தவிக்கிறது. இந்த காலாண்டு முடிவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நஷ்டத்தில் இந்த வங்கி தவிப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இச் செய்தியை மறுக்காத வங்கி நிர்வாகம், ஐஎன்ஜி சிக்கலில் உள்ளது உண்மைதான். இதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், என்று அறிவித்துள்ளது.
தனது முதலீட்டுத் தொகையை மேலும் உயர்த்துவது குறித்து வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம் என்றும் ஐஎன்ஜி அறிவித்துள்ளது.
நெதர்லாந்து அரசு உதவி!:
இந்த நஷ்ட சிக்கலிலிருந்து மீள்வதற்காக நெதர்லாந்து நாட்டின் நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த இரு தினங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர் ஐஎன்ஜி நிர்வாகிகள்.
உடனடியாக 12.12 பில்லியன் டாலர்கள் வரை இந்த வங்கிக்கு நிதி வழங்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இன்று செய்தியாளர்களுக்கு வழங்கவிருப்பதாக ஐஎன்ஜி தலைவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications