'கோத்ரா': 134 பேர் மீதான பொடா வழக்கு ரத்து-உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: கோத்ரா ரயி்ல் தீ வழக்கில் 134 பேர் மீது தீவிரவாத எதிர்ப்பு சட்டமான பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோத்ராவில் 2002ம் ஆண்டு கர சேவகர்கள் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீயில் 59 அப்பாவி பக்தர்கள் பலியாயினர். இதையடுத்து குஜராத்தில் நடத்த பயங்கர மதக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறி 134 முஸ்லீம்களை குஜராத் மாநில அரசு பொடா சட்டத்தில் கைது செய்தது. இதில் 83 பேர் எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களை பொடா சட்டத்தில் கைது செய்தது செல்லாது என மத்திய பொடா மறுபரிசீலனைக் கமிட்டி உத்தரவிட்டது.
ஆனாலும் அவர்களை தொடர்ந்து குஜராத் மாநில அரசு சிறையில் வைத்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர்கள், தங்கள் மீதான பொடா வழக்குகளை கமிட்டி ரத்து செய்துவிட்டதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அங்கு அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன், நீதிபதி தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,
பொடா மறுபரிசீலனைக் கமிட்டியின் பரிந்துரைகளை மாநி்ல அரசும், விசாரணை நீதிமன்றமும் ஏற்க வேண்டும். இந்த கமிட்டியின் பரிந்துரைகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்ற குஜராத் அரசின் வாதத்தை நிராகரிக்கிறோம்.
இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தி்ன் கீழ் தான் விசாரணை நடத்த முடியும்.
பொடா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வேண்டுமானால் குஜராத் அரசு மேல் முறையீடு செய்யலாம். அங்கு அந்தப் பரிந்துரைகள் ரத்து செய்யப்பட்டால் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு்க்க முடியும் என்று தீர்ப்பளித்தனர்.
இதன்மூலம் 83 பேரும் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகள் வரவேற்பு:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இடதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
பொடா சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராகவே முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. குஜராத்தில் இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மையின குழந்தைகள் கூட கைது செய்யப்பட்டனர். இந் நிலையி்ல் இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு நம்பி்க்கையையும் புதிய ஒளியையும் தந்துள்ளது.
பொடா எந்த அளவுக்கு குஜராத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications