செயற்கை கால்கள்- கலாம் வழங்குகிறார்
திருச்சி: போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை குறைவான செயற்கைக் கால்களை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நவம்பர் 2ம் தேதி வழங்குகிறார்.
போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எடை குறைவான செயற்கைக் கால்களை விநியோகிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கம் மூர்த்தி கூறுகையில், இதுதொடர்பான சிறப்பு முகாம்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5000 பேருக்கு இந்த செயற்கைக் கால்களை வழங்கியுள்ளோம்.
தற்போது திருச்சியில் முகாம் நடத்தி வருகிறோம். இதில் பயனாளிகளை தேர்வு செய்துள்ளோம். மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் கழகமும் இணைந்து இந்த செயற்கைக் கால்களை தயாரித்துள்ளன.
லயன்ஸ் கிளப், அரசு நிறுவனங்கள், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து இவற்றை விநியோகித்து வருகின்றன. நவம்பர் 2ம் தேதி திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த செயற்கைக் கால்களை பயனாளிகளுக்கு வழங்குவார் என்றார்.