மதுரையில் மூன்றரை வயது பெண் குழந்தை நரபலி?
மதுரை: மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் மூன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் புது தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வைகை மகளிர் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவஹரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 8ம் தேதி எங்களது உறுப்பினரான உஷாவின் மூன்றரை வயது குழந்தை கோபிகா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடிய போது குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
மறுநாள் காலை ஊரின் சிறிது தூரத்தில் உள்ள பெரிய கால்வாயில் தலை, உடல் முழுவதும் தாக்கப்பட்ட நிலையில் கோபிகா பிணமாக கிடந்தாள்.
கோபிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊர் பொது மக்கள் அங்குள்ள ஒயின்ஷாப் முன்பு பிணத்துடன் மறியல் செய்தோம்.
அதன் பின்பு அங்கு வந்த காவல்துறை கடையை சீல் வைத்தர். அதன் பின்பு கோபிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில், உண்மை குற்றவாளியை தப்பவைக்க ஒரு போலி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோபிகாவை நரபலிக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
எனவே இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை தப்பவிடாமல் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக உறுதி்யளித்தார்.