கனமழை: மனித சங்கிலி போராட்டம் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலிப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்தும், இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பல முனை போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை இந்த மனி சங்கிலிப் போராட்டத்தை மிக பிரமாண்டமான அளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி வைப்பார், 5 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கன மழை காரணமாக இப்போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்குப் பதில் 24ம்தேதியன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.