விப்ரோ பெண் அதிகாரி கடத்தல்-12 மணி நேரத்தில் மீட்பு

விஜயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்படுவது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் கார் டிரைவர் லட்சுமிபதி தலைமையிலான டிரைவர்கள் கும்பல்தான் இந்த கடத்தலுக்கு காரணம்.
இதே கும்பல் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி விஜயலட்சுமியின் தந்தை சிவராமய்யா மற்றும் மகள் திவ்யா ஆகியோரையும் கடத்தியது.
விஜயலட்சுமி விப்ரோ அலுவலகத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். 39 வயதாகும் அவருக்கு வினய் (15), திவ்யா (13) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஞானேஸ்வர். 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது அமெரிக்காவில் இருந்தார் விஜயலட்சுமி.
விவாகரத்துக்குப் பின்னர் பெங்களூர் திரும்பிய அவர் குழந்தைகளுடன் பெற்றோருடன் சேர்ந்து வசித்து வந்தார். ஜெயநகர் கிழக்கு முனை சாலை பகுதியில் அவரது வீடு உள்ளது. அலுவலகம் சர்ஜாபூர் சாலையில் உள்ளது.
இவரது கார் டிரைவராக ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமிபதி பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை பணி முடிந்து விஜயலட்சுமி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
எச்எஸ்ஆர். லே அவுட் பகுதியில்கார் வந்தபோது திடீரென காரை நிறுத்தினார் லட்சுமிபதி. கார் இன்டிகேட்டரில் ஏதோ மோதியிருப்பதாக கூறி காரிலிருந்து இறங்கினார். விஜயலட்சுமி காரில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு திடீரென 3 பேர் வந்து விஜயலட்சுமியை கட்டாயப்படுத்தி கீழிறக்கி இன்னொரு காரில் ஏற்றிச் சென்றனர்.
பின்னர் இரவு 11 மணியளவல் சிவராமய்யாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், உங்களது மகளை கடத்தி விட்டோம். ரூ. 3 கோடி கொடுத்தால் விடுவிக்கிறோம். உங்களது கார் டிரைவர் லட்சுமிபதியை வீட்டுக்கு அனுப்புகிறோம். அவரிடம் ரூ. 3 கோடிக்கான செக் மற்றும் விஜயலட்சுமிக்கு மாற்று உடைகளை கொடுத்து அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சிவராமய்யா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். திலக்நகர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபதி உடனடியாக சிவராமய்யா வீட்டுக்கு விரைந்து வந்தார்.
அப்போது லட்சுமிபதி வீட்டுக்கு வந்தார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீஸ் முறைப்படி விசாரணை நடத்தினர். இதில் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார். தான்தான் இந்த கடத்தலுக்கு திட்டமிட்டதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து எச்எஸ்ஆர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியை போலீஸார் மீட்டனர்.
அவரை அடைத்து வைத்திருந்த விப்ரோ அதிகாரி ஒருவரின் கார் டிரைவரான திலீப், ஆட்டோ டிரைவர் லட்சுமணன், மேக்ஸிகேப் டிரைவர் கபூர் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். லட்சுமிபதியை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி சிவராமய்யா தனது பேத்தி திவ்யாவை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களை, லட்சுமணனும், கபூரும் சேர்ந்து கடத்திச் சென்றனர்.
ரூ. 1.25 கோடி தருமாறு மிரட்டினர். ஆனால் அவ்வளவு தர முடியாது என சிவ ராமய்யா கூறவே, பணத்தைக் குறைத்தனர். பின்னர் திவ்யாவை விட்டு விட்டு போய் பணத்தை எடுத்து வருமாறு சிவராமய்யாவிடம் கூறினர். இருப்பினும் பிற்பகலில் அவர்களை விடுவித்து விட்டனர்.
இந் நிலையில் தான் விஜயலட்சுமியை கடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications