புண்ணில் வேல்..தமிழக அரசு மீது திருமா பாய்ச்சல்
சென்னை: மின் வினியோகம் தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மின்வெட்டால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திடீரென வீட்டுக்கு பயன்படுத்தும் மின் கட்டணத்தை 50 சதவீதம் தமிழக அரசு உயர்த்தி இருப்பது பெரும் வேதனைக்குரியது.
இந்த நடவடிக்கையானது தமிழக அரசின் மீதான நன்மதிப்பை பாதிக்கச் செய்யும். மின்வெட்டால் வேதனைக்குள்ளாகி இருக்கும் மக்களின் மீது மின்கட்டண உயர்வை மேலும் திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கையாகும்.
மின்வெட்டு சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்வர வேண்டும். மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராமதாசும் எதிர்ப்பு:
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்சார பயன்பாடு தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மின் தட்டுப்பாட்டு நிலையை சீர் செய்வதற்கான நடவடிக்கை என்று சொல்வதை விட மின்வாரியத்தின் வருமானத்தை மறைமுகமாக பெருக்குவதற்கான முயற்சி என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.
நீதிமன்றத்திற்கு தடை ஆணை பெறுவதற்கு வழி இருப்பதால் அரசு இப்போது அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டு முறைப்படி மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து பொது விசாரணை நடத்தி அதன் முடிவில் உரிய மாற்றங்களை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 2011ம் ஆண்டுக்கு முன்பு மின் நெருக்கடி நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படுவதற்கு வழியில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே மின் விநியோகத்தில் மேற்கொள்ளப்படும் எத்தகைய கட்டுப்பாடுகளையும் சிறந்த முறையில் அமல்படுத்துவதற்கும், கையிருப்பு மின்சாரத்தை சீராக பகிர்ந்தளிப்பதற்கும் வசதியாக முதலில் மின் வழங்கல் முறையில் தேவையான மாற்றங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய கட்டுப்பாடுகளை முறைப்படி அறிவிக்கும் போது வீடுகளுக்கு முற்றிலுமாக விதிவிலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும்.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் உடனடியாக ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக் கொண்டு மின் தேவையை நிறைவு செய்து கொள்ள உத்தரவிட வேண்டும்.
அல்லது சூரிய சக்தியால் மின்சாரம் பெறுவதற்கான சாதனங்களை பொருத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதே போன்று நன்கொடை வாங்கும் எல்லா சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கும் விதிவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications