இலங்கை கப்பல் மீதான தாக்குதல்-தலைமை தாங்கிய பெண் விடுதலைப் புலி
கொழும்பு: இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலின்போது, பெண் விடுதலைப் புலியான இலக்கியா என்பவர்தான் ஒரு கப்பலை தகர்த்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் நின்ற 2 சரக்கு கப்பல்கள் மீது நேற்று அதிகாலை விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு கப்பல் சேதம் அடைந்தது. இன்னொரு கப்பல் தப்பியதாக இலங்கை தெரிவித்தது.
ஆனால் இதை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், எம்.வி. நிர்மலவா என்ற கப்பல் முற்றிலும் கடலில் மூழ்கியது, இன்னொரு கப்பலான எம்.வி. ருகுனுவா பலத்த சேதமடைந்திருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் தகர்ப்புக்கு குபேரன் மற்றும் பெண் விடுதலைப் புலி இலக்கியா ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர்.
இவர்களில் இலக்கியா, கடற்புலிகள் பிரிவின் பெண்கள் பிரிவு துணைத் தலைவியாக செயல்பட்டவர். தாக்குதலின்போது இருவரும் மரணமடைந்து விட்டனர் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.