போலி பாஸ்போர்ட்-ட்ராவல்ஸ் அதிபர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மற்றும் போலி தொழிற்கல்வி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கியதாக டிராவல்ஸ் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா நாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற ரவி என்பவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். அவரது ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது.
சென்னை புறநகர கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவிக் கமிஷனர் எஸ்.நவநீத கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை ரவியிடன் விசாரணை மேற்கொண்டது.
ரவி கொடுத்த தகவலின்படி அண்ணாநகரில் செயல்பட்டு வந்த டிராவல் பேசேஜ் சென்னை லிமிடெட் என்ற நிறுவனத்தில் போலீசார் ரெய்ட் நடத்தினர்.
அங்கு போலி பாஸ்போர்ட்டுகள், போலி தொழிற்கல்வி சான்றிதழ்கள், தனியார் நிறுவனங்கள் பெயரில் முத்திரைகள், வருமான வரி அலுவலக முத்திரைகள் தயார் செய்து விசா பெறுவதற்கு வெளிநாட்டு தூதரகங்களில் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரும், போலி ஆவணங்கள் தயாரித்தவருமான ரத்தினேஸ்வரன், அவருக்கு உதவியாக இருந்த ராஜசேகரன், வைரவ சுந்தரம், அப்துல் வாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலியாக தயாரித்த தொழிற்கல்வி சான்றிதழ்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர், போலி முத்திரைகள், பாஸ்போர்ட்டின் உதிரி பக்கங்கள், மாருதி காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக கமிஷனர் ஜாங்கிட் தெரிவித்தார்.
கைதான 4 பேரும் ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.