கனமழை: காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கோவை: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் செள செள, பீட்ரூட், கேரட் உள்ளிட்டவையும், உருளைக்கிழங்கும் அதிக அளவில் விளைகின்றன.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இந்தப் பயிர்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும், உருளைக்கிழங்கும் மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் காய்கறி அறுவடை பாதியாகக் குறைந்துள்ளது. காய்கறிகள் வரத்து குறைந்ததால், விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.