கற்பழிப்பு: ஒரிஸ்ஸா கன்னியாஸ்திரி கண்ணீர் வாக்குமூலம்
டெல்லி: ஒரிஸ்ஸாவில் நடந்த கலவரத்தின்போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அந்த அயோக்கியர்கள் மீது சிபிஐ நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஒரிஸ்ஸாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது கிறிஸ்துவ தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மிக உச்சகட்டமாக கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு பிறகு தனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து கன்னியாஸ்திரி மீனா, முகமுடி அணிந்தபடி இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
40-50 பேர் கொண்ட கும்பல் என்னை இழுத்துச் சென்று பானபங்கப்படுத்தியது. கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடந்த வராந்தாவில் தள்ளி எனது உடைகளை கிழித்தனர். எனது இரண்டு கைகள் மீது இரண்டு பேர் ஏறி நின்று கொண்டனர். ஒருவர் என்னை பலாத்காரம் செய்தார்.
12க்கும் மேற்பட்ட போலீஸார் கண் முன்பாகவே இந்த அக்கிரமம் நடந்தது. போலீஸார் அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற முயலவில்லை. என்னை நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் சென்றனர். கலவரக்காரர்களுக்கு ஆதரவாகவே போலீஸார் செயல்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து 4 பக்கங்கள் கொண்ட பத்திரிகை குறிப்புகளை செய்தியாளர்களிடம் வழங்கினர். சம்பவம் குறித்து தயவு செய்து கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் மீனா கேட்டுக் கொண்டார்.