மே.வங்கத்துக்கு கொடி பிடித்த தமிழக எம்பி!

சென்னையில் கடல் சார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான சட்ட மசோதா சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. பெரும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சென்னையில் இப்பல்கலைக்கழகத்தை அமைக்கக் கூடாது, கொல்கத்தாவில் அமைக்க வேண்டும் என கோரி வந்தன.
இந் நிலையில் லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அதேசமயம், தமிழக எம்.பிக்களும் பெருமளவில் அவையில் இல்லை. குறிப்பாக மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி மோகன், அவையில் கோரம் இல்லாததால் அவைக்கு வருமாறு அழைத்தும் கூட வர மறுத்து விட்டாராம். கொல்கத்தாவில்தான் கடல் சார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளாராம்.
சென்னை அருகே கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை முன்பு ஒரு முறை அறிமுகம் செய்ய முயன்றபோது, அமைச்சர் டி.ஆர்.பாலுவை அவையிலேயே மார்க்சிஸ்ட் எம்பிக்கள் தாக்க முயன்றனர். இந்நிலையில் அந்த மசோதா பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு திரும்ப வந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலை நிதிநிலை மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அவையில் போதிய எண்ணிக்கையில் எம்.பி.,க்கள் இல்லை. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க எம்.பியான அமீதா நந்தி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். மசோதா அறிமுகம் செய்யும் போது எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வழக்கம்தான். ஆனாலும் இந்த எதிர்ப்பு காரணமாக அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எம்.பிக்களை அழைப்பதற்காக தி.மு.க., கொறடாவான கிருஷ்ணசாமி சென்றபோது, நாடாளுமன்ற நூலகத்தில் மதுரை எம்.பியான மோகனும், நாகர்கோவில் எம்.பியான பெல்லார்மினும் இருந்தனர்.
அவர்களிடம் அவைக்கு வரும்படி கிருஷ்ணசாமி அழைத்தபோதிலும் இருவரும் வர மறுத்துவிட்டனர். இந்த பல்கலைக்கழகம் கொல்கத்தாவிலும் அமைக்க வேண்டும். பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்தை ஏன் ஒப்புக் கொள்ளவில்லை என்று மோகன் கூறியதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இவர்கள் இருவரையும் அழைத்துப் பார்த்துவிட்டு வராமல் போகவே கிருஷ்ணசாமி அவைக்கு திரும்பினார். கோரம் இல்லை என்பதால், கிடைத்த கால அவகாசத்தில் அமைச்சர் பாலு மற்றும் வயலார் ரவி ஆகியோர் ஆங்காங்கு இருந்த எம்.பிக்கள் பலரையும் அழைத்து வந்து அவைக்குள் உட்கார வைத்தனர். அதன் பின்னர் 15 நிமிடங்கள் பேசிய அமைச்சர் பாலு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழகத்துக்கு கிடைக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களே இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.
இவர்கள் மட்டுமல்லாது அன்றைய தினம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அமைச்சர்கள் பழனி மாணிக்கம், இளங்கோவன், மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.பி.,க்கள் வேணுகோபால், சித்தன், அப்பாத்துரை, சுப்பராயன், காதர்மொய்தீன் ஆகிய எம்.பிக்களும் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications