இயக்குநர்கள் சீமான், அமீர் கைது ஏன்?: டிஜிபி விளக்கம்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக புகார் வந்ததால் இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டதாக டிஜிபி ஜெயின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 19.10.2008 அன்று ராமேஸ்வரத்தில், தமிழ் திரை உலக தமிழின உணர்வுக் குழுவின் சார்பில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
அப்பொதுக் கூட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய அரசின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் பேசினார்கள்.
அவர்களது பேச்சுக்கள் சட்ட விரோதமாக இருந்தபடியால் இதுகுறித்து 24.10.2008 அன்று ராமநாதபுரம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை இ.பி.கோ 124ஏ (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல்), 153ஏ(1), பி (பிரிவினைவாதத்தை தூண்டுதல்) மற்றும் சட்டவிரோத நடவடிக்ைககள் தடுப்புச் சட்டப் பிரிவு 13 (1) பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.