அடுத்த 10 நாட்களில் 25% ஊழியர்கள் வேலை நீக்கம்!!!

இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.
விற்பனை-ஆர்டர்கள் குறைந்து போனது, குறைந்து போன லாபம் ஆகிய காரணங்களால் இந்த நிறுவனங்கள் 10 நாட்களுக்குள்ளாகவே இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளன என அஸோசாம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் 3வது மிகப் பெரிய பொருளாதாரமான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக குறைந்து வருகிறது. 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி 7 சதவீதத்தை நோக்கி சரிந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளது அஸோசாம்.
ஜவுளி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு:
அதே போல இந்திய ஜவுளி உற்பத்தித் துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் துவங்கிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பல ஜவுளி விற்பனை நிறுவனங்கள் திவால் ஆகி மூடப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் ஆர்டர்கள் சரிந்து வருகின்றன.
இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு இந்திய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் வேலை நீக்கமும் கட்டாயமாகிவிட்டது என துணி ஏற்றுமதியாளர் வளர்ச்சி கவுன்சிலான (Apparel Export Promotion Council-AEPC) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல இந்திய துணி உற்பத்தி-ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன என வர்த்தகதுறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் AEPC செயலாளர் விமல் கீர்த்தி சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விவசாயத்துக்குப் பின் மிக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறை ஜவுளித்துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பாவின் முன்னணி ஜவுளி விற்பனை நிறுவனங்களான ஸ்டீவ் அண்ட் பாரிஸ், மெர்வின்ஸ் ஆகியவை சமீபத்தில் திவால் ஆகின.
மேலும் பசிபிக் சன் வியர், பேஷன் பக், கேத்தரீன்ஸ், புட் லாக்கர்ஸ், ஆன் டைலர் ஆகிய சர்வதேச ஜவுளி விற்பனை நிறுவனங்கள் அமெரிக்கா-ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்டோர்களை மூடிவிட்டன.
மேலும் எடி பாயர், கேச்சே, டால்போட்ஸ், ஜே ஜில், கேப் இன்க், பெப் பாய்ஸ், லெவிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை மையங்களை பெருமளவில் குறைத்துவிட்டன.
பொருளாதார ஸ்திரமின்மையால் இந்த நிறுவனங்களின் விற்பனை படு பாதாளத்துக்குப் போய்விட்டதால் கடைகளை மூடி வருகின்றன.












Click it and Unblock the Notifications