மேல் ஜாதியினர் மிரட்டல்- மலைக்கு இடம் பெயர்ந்த தலித்கள்
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி என்ற கிராமத்தைச் சேர்ந்த 75 தலித் குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மேல் ஜாதியினர் தாக்கக் கூடும் என்ற அச்சத்தால் மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் மேல் ஜாதியினரால் தங்களது உயிருக்கும்,உடமைக்கும் ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸாரும், வருவாய்த்துறையினரும் தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை ஊருக்கு திரும்ப மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
குடும்பத்தினர் மற்றும் ஆடு,மாடுகளுடன் காரிசாத்தான் மலைப் பகுதியில் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களை சமாதானப்படுத்த வருவாய்த்துறையினரும், போலீஸாரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஊர் திரும்ப மாட்டோம். எங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரியுள்ள அவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளையும் தாசில்தார் தங்கத்துரையிடம் அளித்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார்.
இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பந்தப்புளி கிராமத்தில் உள்ள கணணநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட தலித் மக்கள் அனுமதிக்கப்படவில்லையாம். மேலும் தொடர்ந்து தங்களை மேல் ஜாதியினர் மட்டம் தட்டியும், மிரட்டியும் வருவதாகவும் தலித்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கோவில் பூட்டியே கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் மக்கள் மலைக்கு இடம் பெயர்ந்துள்ளதால் பந்தப்புளி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications