சென்னை-2 வயது சிறுவனை கொன்ற கொடூரன் கைது
சென்னை: சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் மோனிக் என்ற 2 வயது சிறுவனை கொடூரமாகக் கொலை செய்த கொலையாளியை சென்னை போலீஸார் மும்பையில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி ஷைலா. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் ஆனந்த். இந்த தம்பதியின் 2 வயது மகன்தான் மோனிக்.
ஆனந்த்திடம் வேலை செய்து வந்தவர் ஜூக்னு. அதன் காரணமாக அடிக்கடி ஆனந்த்தின் வீட்டுக்கு வருவார். ஷைலாவிடம் அவ்வப்போது பணம் கடனாகப் பெற்றுச் செல்வது வழக்கம்.
கடந்த செப்டம்பர் மாதமும் இதுபோல பணம் கேட்டுள்ளார் ஜூக்னு. ஆனால் ஷைலா பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜூக்னு, வெளியில் கூட்டிச் செல்வதாக கூறி சிறுவன் மோனிக்கை கடத்திச் சென்றான்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் 26ம் தேதி நள்ளிரவில், திருமுல்லைவாயில் பகுதியில், உள்ள ரயில் பாதையில் மோனிக்கின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தண்டவாளத்தில் வைத்து சிறுவனின் தலையையும், கால்களையும் ஜூக்னு மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
தலைமறைவாகி விட்ட ஜூக்னுவை போலீஸார் வலை வீசி தேடி வந்தனர். நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு மும்பையில் வைத்து சென்னை தனிப்படை போலீஸார் ஜூக்னுவை பிடித்தனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் கூறுகையில், பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த விசாரணையில், மும்பையில் உள்ள ஒரு வீட்டில் ஜூக்னு பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று ஜூக்னுவை கைது செய்தனர்.
தற்போது மும்பை, லோக்மான்ய திலக் காவல் நிலையத்தில் ஜூக்னு வைக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய அனுமதி பெற்று சென்னைக்குக் கொண்டு வரப்படுவார் என்றார்.












Click it and Unblock the Notifications