என்னை தாராளமாக கைது செய்யலாம்-திருமா
சென்னை: இலங்கையில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் அதைச் செய்ய முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியது அனைத்து கட்சி கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் பேசிய தகவல் முழுவதுமாக வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் விரைவில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி தமிழக மக்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதை தெளிவாக உணர்த்தியது.
தமிழக எம்பிக்கள் பதவி விலகினால் இந்திய அரசின் நிலைதன்மைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பதவி விலகுவது நல்லதல்ல. அதே நேரம் அந்த முடிவை கைவிடாமல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை எம்பிக்கள் பதவி விலகுவதை தள்ளிப் போட வேண்டும்.
800 டன் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை ஈழத் தமிழர்களுக்கு அனுப்ப உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெற்றிதான்.
ஆனால் 800 டன் உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ, ஐநா தொண்டு நிறுவனம் மூலமாகவோ மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது, அது தமிழர்களுக்குப் போய்ச் சேராது.
என்னைக் கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால், என்னைக் கைது செய்ய முதல்வரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டியத் தேவையே இல்லை.
தகவல் கொடுத்தால் சிறைவாசலில் நானே வந்து நிற்க தயார் என்பதை முதல்வருக்கு தோழமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கைதாகவும், சிறை செல்லவும் விடுதலை சிறுத்தைகள் அஞ்சமாட்டோம். அதேநேரம், என்னைக் கைது செய்தால் முதல்வர் மீதோ, அரசு மீதோ வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ மாட்டேன்.
தேர்தல் கூட்டணி என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நான் பேசியிருந்தால் என்னை கைது செய்ய துளியளவும் தமிழக காவல்துறை தயக்கம் காட்ட வேண்டாம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.
முதல்வர் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தவணையாக ரூ.2 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினேன்.
இனப் படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications