'இந்து பயங்கரவாதம்'-சொல்லுக்கு ராம.கோபாலன் எதி்ர்ப்பு
சென்னை:மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சில இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ஊடகங்களும் போலி மதச்சார்பின்மைவாதிகளும் 'இந்து பயங்கரவாதம்' என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம் ஆகும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவ்ன் நகரில் குண்டு வெடிப்பு நடந்ததில் 4 பேர் பலியானார்கள். பலர் காயமஅடைந்தனர். காவல் துறையினர் நடத்திய புலனாய்வில் மூலம் இந்துக்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஊடகங்கள் 'இந்து பயங்கரவாதம்' என்ற ஒரு புதிய சொல்லை உலவ விட்டிருக்கின்றன.
இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.
மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.
இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.
மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
இந்து முன்னணி, மாலேகாவ்ன் நகரில் கலவரத்திற்கு காரணமானவர்களையும் கண்டிக்கிறது. அதே நேரத்தில் அவதூறு பிரச்சாரம் செய்பவர்களையும் கண்டிக்கிறது.
பயங்கரவாதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை தடுக்க, தண்டிக்க பொடா போன்ற சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.












Click it and Unblock the Notifications