தேவர் ஜெயந்தி-பசும்பொன்னில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
கமுதி: முத்துராமலிங்கத் தேவரின் 101வது ஜெயந்தி விழா மற்றும் 46வது குருபூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்து வருகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இரண்டாவது நாளான இன்று பெண்கள் தேவர் சமாதி முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
ஏராளமான ஆண்கள் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கமுதி, முதுகுளத்தூர், தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜோதி ஏந்தியபடி வந்து தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி செந்தில்வேலன் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் ஆகியோர் தேவர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
3ம் நாளான நாளை குருபூஜை விழா நடக்கிறது.
திமுக சார்பில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் அஞ்சலி செத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் அன்னதானம் வழங்குகிறார்.
அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேவர் சமாதியில் அஞ்சலி செலத்திவிட்டு அன்னதானம் நிகழ்ச்சியையும் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து தேமுதிக சார்பில் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்துகிறார்.
பாஜகவின் வேண்டுகோள்:
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (வியாழக்கிழமை) பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெங்கையா நாயுடு வருவதாக திட்டமிட்டிருந்தார். தேர்தல் தேதி அறிவித்துவிட்ட காரணத்தால் அதே நாளில் ராஜஸ்தானில் தேர்தல் பணி காரணமாக அவர் செல்ல நேர்ந்துள்ளது.
எனவே திருநாவுக்கரசரும், நானும், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சுப.நாகராஜன் ஆகியோர் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்துகிறோம்.
31ம் தேதி திருச்சியில் பாஜக சார்பில் தேவர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதே நாளில் மதுரையில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கூட்டாக தேவர் ஜெயந்தியை கொண்டாடுகின்றன. அதிலும் நான் கலந்து கொள்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக நான் பசும்பொன் சென்று தேவர் குரு பூஜையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு மிக மோசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமான பிரமுகர்களது கார் கூட போக்குவரத்து நெரிசலில் சுமார் ஒரு மணி நேரம் சிக்கி நின்றது. ஆனால் அதை சரிசெய்து ஒழுங்குபடுத்த போதுமான காவலர்கள் இல்லை.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னிதானம், தேவர் சமாதி அளவுக்கு சமமான விஸ்தரனம் தான் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு மேல் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தரிசனமும் அபிசேகமும் செய்கிறார்கள். இந்த ஆண்டாவது தேவர் நினைவிடத்தில் எந்தவித மோதலும் இடிபாடும் இல்லாமல் முறையாக அஞ்சலி செலுத்த தேவையான ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்யும் என எதிர்பார்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பசும்பொன், கமுதி, கோட்டைமேடு போன்ற பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications