நெல்லையில் ஒரே எண்ணில் உலா வரும் 2 கார்கள்
நெல்லை: தமிழகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலங்களில் எத்தனையோ குளறுபடிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் எண்களை கம்யூட்டர்மயமாக்கும் முயற்சியால் எண்கள் விடுபடும் நிலை சில இடங்களில் காணப்படுகிறது.
லைசன்ஸ், ஆர்சி புக், எப்சி சான்றிதழ் பெற சாமனிய மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகமோ ஒரே எண்ணை இரு நபர்களுக்கு அளித்துவிட்டு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
நெல்லை டயோசிஸைச் சேர்ந்த விஐபி ஒருவர் ஓராண்டுக்கு முன் தனது சவர்லே காருக்கு குறிப்பிட்ட பேன்ஸி எண்ணைக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த எண்ணை பெற அவர் ரூ. 20,000 வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர் விண்ணப்பித்தபடியே டி.என். 72 ஏபி 999 என்ற எண் அவருக்கு கிடைத்தது. இவரது செல்போன் எண்ணும் 999 முடிவதால் இந்த எண்ணை விரும்பி கேட்டுள்ளார்.
இந் நிலையில் நெல்லை அரசியல் பிரமுகரான மற்றொரு விஐபி அதே எண்ணை தனது சபாரி காருக்கு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த எண் வேறு ஒருவருக்கு தந்துவிட்ட ஆர்டிஓ அலுவலகம் இந்த எண் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், சென்னையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சிலரை பிடித்து இவரும் அதே எண்ணை பெற்று விட்டார். ஆர்டிஓ அலுவலக உதவியோடு தான் இந்த எண் அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 6 மாத காலமாக இரு விஐபிகளின் வாகனங்களும் நெல்லையில் ஒரே எண்ணில் உலா வருகின்றன.