திருச்சியை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-2 பேருக்கு பலன்
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் சிறுநீரகங்களும், கண்களும் தானமாக தரப்பட்டுள்ளன.
சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் விபத்தில் சிக்கி மூளை செயலிழந்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக தந்தனர். இந்த மனிதாபிமான செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடவே பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹிதேந்திரன் குடும்பத்தினரைத் தொடர்ந்து மேலும் 3 பேரின் குடும்பத்தினர் இதுபோல தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இந்த வரிசையில் இணைந்துள்ளது திருச்சி தமிழ்ச்செல்வனின் குடும்பம்.
திருச்சியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (49). இவரும், மனைவி ராணியும் தீபாவளிக்காக கடைக்குச் சென்றிருந்தனர். பர்ச்சேஸை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதில் தமிழ்ச்செல்வன் மூளைசெயலிழந்தார். அவர் உயிர் பிழைக்க முடியாது என டாக்டர்கள் கூறி விட்டனர். ராணியும் விபத்தில் காயமடைந்தார்.
இதையடுத்து தனது கணவரின் சிறுநீரகங்கள் மற்றும் கண்களை தானமாக வழங்க முன்வந்தார் ராணி. இதையடுத்து திருசசியில் உள்ள தனியார் மருத்துவமனை தமிழச்செல்வனின் கண்களையும், சிறுநீரகங்களையும் எடுத்தனர்.
இதுகுறித்து டாக்டர் குணசேகரன் கூறுகையில், உடல் உறுப்பு தானம் குறித்து ராணியிடம் எடுத்துக் கூறினோம். அவரும் அதைப் புரிந்து கொண்டு சம்மதம் கொடுத்தார். அவரது உறவினர்களும் சம்மதித்தனர்.
தமிழ்ச்செல்வனின் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பாதுகாக்கும் வசதி எங்களிடம் இல்லை. எனவே சிறுநீரகம் மற்றும் கண்களை மட்டும் தானமாக எடுத்துக் கொண்டோம். 15 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.
ஒரு சிறுநீரகம், தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த முருகானந்தம் என்ற 27 வயது வாலிபருக்கு பொருத்தப்பட்டது. இன்னொரு சிறுநீரகம், மணப்பாறையைச் சேர்ந்த முத்துச்செல்வன் (43) என்பவருக்குப் பொருத்தப்பட்டது.
கண்களை ஒரு கண் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். உரியவர்கள் கிடைத்தால் கண்கள் பொருத்தப்படும் என்றார்.