அஸ்ஸாம்: 12 இடங்களில் குண்டுவெடிப்பு-61 பேர் பலி

தலைநகரான குவஹாத்தியில் 6 குண்டுகள் வெடித்தன. கனேஷ்குரி, திஸ்பூர், பான் பஸார், பேன்ஸி பஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த குண்டுகள் வெடித்தன.
இதையடுத்து அப்பர் அஸ்ஸாம் எனப்படும் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கோக்ரஜார், பர்பேடா, போங்கய்கோன் ஆகிய இடங்களில் 6 குண்டுகள் வெடித்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் இந்த குண்டுகள் வெடித்தன.
இதில் 61 பேர் பலியாகியுள்ளனர். 275 பேர் காயமடைந்தனர்.
குவஹாத்தியில் ஊரடங்கு:
இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து குவஹாத்தியில் பல இடங்களில் போலீசார், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் மீது தாக்குதல் நடந்தது.
இதையடுத்து குவஹாத்தி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உல்பா மறுப்பு:
இதற்கிடையே இந்த குண்டுவெடிப்புகளுக்கு தாங்கள் காரணமல்ல என்று கூறி சில செய்தி நிறுவனங்களுக்கு உல்பா தீவிரவாத அமைப்பு இ-மெயில் அனுப்பி வைத்துள்ளது.
விமானங்கள் ரத்து:
இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குவஹாத்தி செல்லும் தனது அனைத்து விமானங்களையும் ரத்து செய்துவிட்டது.
குண்டுகளுடன் ஸ்கூட்டர் கண்டுபிடிப்பு:
இதற்கிடையே குஹாத்தியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்த வெடிபொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது.
வங்கதேச தீவிரவாதிகளே காரணம்-அத்வானி:
இந்த குண்டுவெடிப்புகளை கடுமையாக கண்டித்துள்ள பாஜக தலைவர் அத்வானி, இந்த் தாக்குதலுக்கு வங்க தேசத் தீவிரவாதிகள் தான் காரணம். தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு முழுமையாகவே தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் கோரிக்கை:
தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவராஜ் பாட்டீல்:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், இந்த தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கிறேன். மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மத்தியக் குழு அஸ்ஸாம் விரைந்துள்ளது என்றார்.
உள்துறைச் செயலாளர் கூறுகையில், அஸ்ஸாமில் பல வட கிழக்கு மாநில தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர்களில் ஒரு கும்பல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். ஆனாலும் இப்போதைக்கு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. விசாரணையில் தெரிய வரும் என்றார்.
''இவர்கள் குறை சொல்வதா?'':
உள்துறை இணைமைச்சர் ஷகீல் அகமத் கூறுகையில்,
தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து இப்போதே ஏதும் கூற முடியாது. விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும். இது மக்களை பிளவுபடுத்தி லாபம் பார்க்கும் அரசியல் பிழைப்பவர்களின் வேலையாகவே தெரிகிறது. இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் மன்னிக்க முடியாது.
அதே நேரத்தில் மாலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, தீவிரவாத விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லும் அதே நபர்கள் தான் குண்டு வெடிப்புகளையும் நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications