For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான படிக்கட்டில் வழுக்கிய ஜெ-கோபத்துடன் வீடு திரும்பினார்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்ல விமானத்தில் ஏறிய ஜெயலலிதா படிக்கட்டில் நிலை தடுமாறி வழுக்கினார். இதையடுத்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் கோபத்துடன் காரில் ஏறி வீடு திரும்பினார்.

பின்னர் பிற்பகலில் அவர் மீண்டும் மதுரை கிளம்பினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்ல திட்டமிட்டார்.

இதற்காக மும்பையில் இருந்து தனியாருக்கு சொந்தமான அந்த விமானம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டது.

இன்று காலை 10.55 மணிக்கு சசிகலா, பிஏ, வேலைக்காரப் பெண், பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் சென்னை விமான நிலையம் வந்தார் ஜெயலலிதா.

7 இருக்கைகள் கொண்ட அந்த தனியார் விமானத்தில் ஜெயலலிதா ஏறுவதற்காக 3 படிக்கட்டுகள் கொண்ட லேடர் பொறுத்தப்பட்டது.

அதன் இரண்டாவது படிக்கட்டில் ஏறும்போது ஜெயலலிதா திடீரென நிலை தடுமாறி வழுக்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக அவராகவே சமாளித்துக் கொண்டு நின்றார்.

படிக்கட்டிலேயே 5 நிமிடங்கள் நின்றிருந்த ஜெயலலிதா, பின்னர் கோபத்துடன் கீழே இறங்கினார். தனது பி.ஏவைக் கூப்பிட்டு காரை கொண்டு வரச் சொன்னார்.

கார் வந்தவுடன் கோபத்துடனேயே அதில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து சசிகலா, பிஏ, பாதுகாப்பு அதிகாரி, வேலைக்காரப் பெண்ணும் ஏறினர். இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் திரும்பிவிட்டார் ஜெயலலிதா.

பின்னர் மீண்டும் 1.30 மணிக்கு அதே விமானம் மூலம் அவர் மதுரை புறப்பட்டார். கூடவே சசிகலாவும் சென்றார். இந்த முறை 3 படிக்கட்டுகளுக்குப் பதிலாக 5 படிக்கட்டுகள் கொண்ட வசதியான லேடரை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றார்.

கார் மூலம் தேவர் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை திரும்பினார் ஜெயலலிதா.

அங்கிருந்து தனி விமானத்தில் இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.

ஜெயலலிதாவுக்கு புலிகளின் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து பசும்பொன்னில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் பசும்பொன்னி்ல் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏராளமான அதிமுகவினர் குவிந்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X