திமுக தேர்தலில் பயங்கர வன்முறை- எம்எல்ஏ கார் எரிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் திருவையாறு எம்எல்ஏவின் கார் எரிக்கப்பட்டது.
மேலும் துணை எஸ்பியின் மண்டை உடைக்கப்பட்டது. இன்னொரு காவலரின் முகம் உடைந்தது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய திமுக செயலாளர் பதவிக்கு பூண்டி வெங்கடேசனும், கல்லணை செல்லக்கண்ணுவும் போட்டியிட்டனர். இவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது.
இந்தத் தேர்தல் பூதலூர் ஆர்.கே.ஏ.பி. கல்யாண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்குப் பதிவின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
இரு தரப்பும் அடித்துக் கொண்டு உருண்டனர். நாற்காலிகள் பறந்தன. கல்வீச்சும் நடந்தது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவையாறு போலீஸ் துணை எஸ்.பி. அமிர்தகுமார், காவலர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மீது ம் கற்கள் வந்து விழுந்தன. இதில் அமிர்தகுமாரின் மண்டை உடைந்தது. ராஜேஷ் கண்ணாவின் தாடை உடைந்தது.
கல்யாண மண்டபத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பூண்டி வெங்கடேசனுக்கு சொந்தமான கார் அடித்து நொறுக்கப்பட்டு, தலைகுப்புற கவிழ்க்கப்பட்டது.
திருவையாறு எம்எல்ஏவான துரை சந்திரசேகரன், பூதலூர்- தஞ்சை பிரிவு சாலையில் நின்று கொண்டு தேர்தல் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திமுகவின் ஒரு கோஷ்டி ஆயுதங்களுடன் அங்கே சென்றது. அவர்களைப் பார்த்தவுடன் துரை சந்திரசேகரன் தப்பியோடினார். ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அந்தக் கும்பல் அவரது காரை அடித்து நொறுக்கி, தீ வைத்தது.
இந்த திமுக கோஷ்டி மோதலால் பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications