கருப்பைக்கு வெளியே பெருங்குடலை ஒட்டி பிறந்த குழந்தை
சென்னை: பெண்ணின் கருப்பைக்கு வெளியே பெருங்குடலை ஒட்டி வயிற்றுப் பகுதியில் வளர்ந்த சிசு நலமுடன் பிறந்தது. இவ்வாறு ஒரு குழந்தை பிறப்பது இந்தியாவில் 2வது குழந்தையாகும்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையின் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் வசந்தா சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:
வழக்கமாக கருப்பையில் தான் குழந்தை உருவாகும். மாறாக சில பெண்களுக்கு கர்ப்பப் பையின் குழாயிலும் குழந்தை உருவாகும். அது அதிகபட்சம் 12 வாரங்கள் வரை குழாயில் தங்கும். அதன்பிறகு குழாய் வெடித்து குழந்தைக்கும் தாய்க்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுண்டு.
கருப்பையின் உள்ளே கரு உருவாகாமல் கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்வது மிக மிக அரிது. அதிலும் அந்த குழந்தை பிழைப்பது மிகவும் அரிது.
இப்படி கருப்பைகக்கு வெளியே வயிற்றுப் பகுதியில் வளர்ந்து, பிழைத்த அதிசய குழந்தை சென்னையில் பிறந்துள்ளது.
செய்யாறு அருகே பெருமாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனுசாமியின் மனைவி மீனா (37) கர்ப்பமான பின் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
மீனாவுக்கு கர்ப்பப் பையின் குழாயில் குழந்தை உருவாகி அது 12வது வாரத்தில் வெடித்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக கர்ப்பப் பைக்கும், பனிக்குடத்துக்கும் எந்த சேதம் ஏற்படவில்லை.
குழந்தை வளரும் பனிக்குடத்தின் ஒரு பகுதி வெளியே வந்து பெருங்குடலுடன் ஒட்டியுள்ளது. மற்றொரு பகுதி கருக்குழாயுடன் ஒட்டியுள்ளது.
இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. செய்யாறில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.
பெருங்குடலுக்கு வரக்கூடிய ரத்தக்குழாயில் இருந்து குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன், உணவு கிடைத்துள்ளது. இதனால் குழந்தை வளர்ந்துள்ளது.
இப்படி வளரும்போது குழந்தை சரியாக வளராது. வயிற்றுப் பகுதியில் உள்ள வாயுக்கள் காரணமாக இப்படி வளரும் 99 சதவீத சிசுக்கள் இறந்துவிடும். ஆனால் மீனாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை மிக அதிசயமாக ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.
தொடர்ந்து மீனாவுக்கு வயிற்று வலி இருந்த நிலையில் பிரசவ நேரமும் நெருங்கிவிட்டது. இதையடுத்து கடந்த 12ம் தேதி எங்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர்.
அவருக்கு டாக்டர் சரளா பிரசவம் பார்த்தார். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
ரத்தப்போக்கு நிற்காததால் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பி.கலீல் ரகுமான் அழைக்கப்பட்டார். அவர் நஞ்சுக்கொடியை தேடியபோது அது பெருங்குடலுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைத் பார்த்தார். அதன்பிறகுதான் குழந்தை கருப்பையில் வளராமல் பெருங்குடல் அருகே வளர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறிய அறுவை சிகி்ச்சை மூலம் ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது.
குழந்தை 2 கிலோ 250 கிராம் எடையுடன் உள்ளது. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். எனக்கு தெரிந்து இதுவரை உலகத்தில் 109 குழந்தைகள் இது மாதிரி பிறந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் ஏற்கனவே வடமாநிலத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது 2வது குழந்தையாகும் என்றார் டாக்டர் வசந்தா சுப்பையா.












Click it and Unblock the Notifications