சமத்துவபுரத்துக்காக கோவில் நிலம்?-இ.முன்னணி எதிர்ப்பு
சென்னை: பஸ் நிலையம் அமைக்க, ரோடு போட, சமத்துவபுரம் கட்ட என்று கோயில் நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இந்து ஆலயங்களுக்கும், மடங்களுக்கும் ஏறத்தாழ 4.79 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. 1.23 லட்சம் பேர் இதை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இது தவிர 22,599 கட்டடங்களை 22,600 பேர் பயன்படுத்தி வருகிறார்கள். 33,627 வீட்டு மனைகள் 33,665 பேரின் வசம் உள்ளன.
இவற்றை அனுபவித்து வருபவர்கள் பெரும்பாலும் வாடகையே கொடுப்பதில்லை அல்லது சொற்ப தொகையை வாடகையாகக் கொடுக்கிறார்கள்.
தனியார் நிலங்கள், வீடுகள், வீட்டு மனைகள் ஆகியவற்றின் வாடகை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஆனால் அறநிலையத்துறை வாடகையை உயர்த்தினால் கட்சிக்காரர்கள் போராட வருகிறார்கள்.
அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின்படி முறையாக குத்தகையோ, வாடகையோ கொடுக்காதவர்களை வெளியேற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் பார்வையில் கோயில் சொத்துக்கள் மைனர் சொத்துக்கள். வழக்கு என்று வரும்போது கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் திறமையாகவும், கடுமையாகவும் செயல்பட வேண்டும் என்று 1967லேயே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந் நிலையில் மார்க்கெட் நிலவரப்படி வாடகை, குத்தகை வசூலிக்க அறநிலையத் துறை தீவிரம் காட்ட வேண்டும்.
பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் சிறு கோயில்களை அறநிலையத்துறை அமைச்சரும், ஆணையரும் பார்வையிட்டு அவற்றை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
மேலும் பஸ் நிலையம் கட்டுவது, ரோடு போடுவது, சமத்துவபுரம் கட்டுவது போன்ற பணிகளுக்காக கோயில் நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது.
பக்தர்கள் குரல் எழுப்பி கோயில்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் இராம.கோபாலன்.












Click it and Unblock the Notifications