வான் புலிகளுக்கு பிரபாகரன் விருது

கொழும்பு அனல் மின் நிலையம் மீதும், மன்னாரில் ராணுவ தளம் மீதும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலை நடத்திய வான் புலிகளின் பிரிவுக்கு பிரபாகரன் பாராட்டு தெரிவித்து நீலப் புலி' என்ற விருதை வழங்கினார்.
ரகசிய இடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வவுனியா போரில் வீர மரணம் அடைந்த கரும் புலிகளுக்கு பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.
கடற்படை-புலிகள் கடும் மோதல்:
இதற்கிடையே யாழ்ப்பாணம் அருகே இன்று அதிகாலை இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் விடுதலைப் புலிகளின் படகுகள் மூழ்கடிக்கப் பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான பீரங்கிப் படகை மூழ்கடித்துவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இலங்கையின் வடக்கே உள்ள யாழ் தீபகற்ப பகுதியில் விடுதலைப் புலிகளின் படகுகள் வருவதைப் பார்த்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் விடுதலைப் புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டதாகவும் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படை வீரர்கள் 5 பேர் காயம் அடைந்ததாகவும் கடற்படை செய்தி தொடர்பாளர் தஸ்சநாயக்கே தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கடற்பரப்பில் நடந்த மற்றொரு மோதலில் இலங்கை கடற்படையின் டோரா பீரங்கி படகு ஒன்று கடல் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கலமும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை நாகர்கோவில் கடற்பரப்பில் இந்த படகுகள் சென்றுகொண்டிருந்த போது கடற் புலிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
கடற் புலிகள் முகாம் மீது தாக்குதல்:
அக்கராயன் குளம் அருகே மேற்கே 2.5 கி.மீ. தூரத்தில் உள்ள ஜெயந்தி நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்படை பிரிவு முகாம் உள்ளது.
கடற்புலிகளின் தளபதி சூசை இதன் பொறுப்பாளர் ஆவார். இந்த முகாம் மீதும் ராணுவ விமானங்கள் சர மாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
தாக்குதலில் அந்த முகாம் அழிக்கப்பட்டதாக விமானப்படையின் செய்தி தொடர்பாளர் நாயனக்கரா தெரிவித்தார்.
வயிற்றுப் போக்கு-மலேரியா..தமிழர்கள் அவதி:
இதற்கிடையே போர் காரணமாக காட்டுப் பகுதிகளில் இடம் பெயர்ந்து தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் அல்லாடிக் கொண்டுள்ள நிலையி்ல் மலேரியா, வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்களும் அவர்கள் மத்தியில் பரவியுள்ளது.
மருந்தும் இல்லாமல் சிகிச்சை பெற மருத்துவமனயோ, டாக்டர்களோ இல்லாமல் இந்த லட்சக்கணக்கான மக்களின் நிலைமை சொல்லொண்ணா துயரமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications