உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும்! கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதாலேயே ஆயுதமேந்தினார்கள். போர் ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்றாலும் உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் பிறந்தே தீரும், என்றார் கமல்ஹாசன்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசியதாவது:

இங்கே பேசுவதற்கு சில அறிவுரைகள் சொல்லப்பட்டன. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக் கொள்ளும் இந்த உலகத்தில், உள்ளத்தில் இருப்பதைச் சொன்னால் சும்மா இருப்பார்களா...

இங்கே அமர்ந்துள்ள கலைஞர்களுக்கும், அங்கே உண்மையைப் பேசியதற்காக முள்கிரீடம் சுமந்து சிறைக்குப் போய் நேற்று மலர் கிரீடத்துடன் வலம் வந்த தம்பிகள் அமீர், சீமானுக்கும் சரி எனது வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே இலங்கைப் பிரச்சினை குறித்த நம் பார்வையில் சில திருத்தங்களைச் சொன்னார் திருமாவளவன். அவர் சொன்னது முற்றிலும் சரியானது. இலங்கை இனப் பிரச்சினை முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் தமிழர்களுக்கு இங்கே நாமே ஒரு ஈழ நெல்லையை, ஈழ மதுரையை உருவாக்கித் தருவோம் என்று பேசினார் எஸ்ஜே சூர்யா. ஆனால் அதற்கெல்லாம் அவர்களின் தன்மானம் இடம் தராது. அப்படி ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களும் இனத்தால் தமிழர்கள் அல்லவா...

இங்கிலாந்திலிருந்து போய் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான் இன்றைய அமெரிக்கர்கள். ஆனால் இங்கிலாந்தை தங்கள் தாயகம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. இங்கிலாந்து வெள்ளைக்காரர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் இருப்பது போன்ற ஒரு உணர்வுதான் ஈழத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ளது. ஆனால் இன உணர்வு எப்போதும் உள்ளது. ஈழம்தான் அவர்கள் மண். அங்குதான் அவர்கள் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் மண்ணைத் திருப்பித் தர வேண்டும்.

இந்தப் பிரச்சினையை தமிழர்களின் பிரச்சினை என்று குறுகிய வட்டத்துக்குள் பார்க்க வேண்டாம். இது ஒரு உலகப் பிரச்சினை. இனப் படுகொலை எங்கு நடந்தாலும் அதை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் போராட வேண்டும்.

இலங்கைப் பிரச்சினைக்கு போர் ஒரு நல்ல தீர்வாகாது. அதை உலகமும் அறிந்துள்ளது, மகாத்மா பிறந்த இந்தியாவும் உணர்ந்துள்ளது.

ஆனால் உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும். நாளை சுதந்திரம் கிடைத்தால் இந்த தீவிரவாதிகள் தியாகிகளாவார்கள்.

வாஞ்சிநாதன் துப்பாக்கி எடுத்தபோது என்ன வாதி...! ஒருவர் தீவிரவாதியா இல்லையா என்பதா காலம் முடிவு செய்யட்டும். மனிதர்கள் நாம் அதை முடிவு செய்யக்கூடாது.

இனப் பிரச்சினையில் சுமுக முடிவு இல்லாததால்தான் அவர்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். எனவே முதலில் ராணுவம் போரை நிறுத்தட்டும். இலங்கையில் இந்த போர் நிறுத்தத்தை உடனே கொண்டு வருவது உலகக் கடமை. எந்தக் குழந்தை செத்தாலும் சோகம்தான். இலங்கை அரசு எங்களின் இந்தக் குரலுக்கு உடனே செவிசாய்க்க வேண்டும். இல்லேயேல் இன்னும் இதுபோன்ற குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டே இருக்கும், என்றார் கமல்.

சத்யராஜ் அசத்தல்!

முன்னதாக, சத்யராஜ் பேசினார். இந்த முறை அவரது பேச்சு மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.

அவர் பேசியதாவது:

இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்படும் இந்த உண்ணாவிரத்ததில் கட்டுப்பாடாகப் பேச வேண்டும் என்றார்கள். இந்திய அரசை எதிர்க்கக் கூடாது, சிங்கள பேரினவாத, கொடுங்கோல் அரசையும் எதிர்க்கக் கூடாது. உணர்ச்சியையும் காட்டக் கூடாது... அப்படின்னா என்னதான் பேசறது...

இலங்கையில் இதுவரை தமிழர்கள் யாரும் கொல்லப்படவில்லை, அவர்கள் சர்க்கரை வியாதி வந்தும், மாரடைப்பு வந்தும் செத்துப் போனார்கள் என்று சொல்லிவிடலாமா... ஒரு தமிழனைக் கூட சிங்கள இன வெறிபிடித்த ராணுவம் கொல்லவே இல்லை என்று சான்றிதழ் தரணுமா...

செஞ்சோலைக் குழந்தைகள் செத்தது கூட அப்படித்தானா... சிங்களர்கள் குண்டுபோடும் போது செஞ்சோலைக்குள் புலிகள் இருந்தார்கள், குண்டு போட்ட பிறகு அவர்கள் குழந்தைகளாக மாறி செத்துப்போய்விட்டார்கள் என்று சொல்லச் சொல்கிறீர்களா... விட்டா அப்படியும் சொல்வீர்கள். காரணம் தமிழன் இளிச்சவாயன் பாருங்க...

ஊட்டியில் நாங்கள் வழக்கமாக ஷூட்டிங் நடத்தும் ஒரு பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் யாருக்கும் இப்போதெல்லாம் அனுமதி கிடையாது. காரணம் அங்குள்ள குரங்குகள் அந்த நேரத்தில் இனவிருத்தியில் ஈடுபடுமாம். மனிதர்களின் சத்தம் கேட்டு அதுங்களுக்கு மூட் அவுட் ஆகிடக் கூடாதுன்னு இந்தத் தடையாம்...

இந்தக் குரங்குகளை விட கேவலமாகப் போய்விட்டானா தமிழன்!

இந்திய அரசைக் கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும்... என் பணத்தில் வாங்கிய ஆயுதத்தை வைத்தே என் உறவுகளைக் கொல்லும் இந்த அரசைக் கண்டிக்காமல் இருக்க முடியுமா...

இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை இந்தியா இப்போது ஒப்புக் கொள்கிறது. அந்த ஆயுதங்கள் யார் பணத்தில் வாங்கப்பட்டவை... அந்தப் பணத்தில் இந்தத் தமிழர்களின் வரிப் பணமும் சேர்ந்துள்ளதல்லவா?

என் வரிப்பணத்தில் ஆயுதம் வாங்கி என் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறீர்களா...

தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வ குடிகள். சிங்களர்கள் ஒரிஸ்ஸாவிலிருந்து போனவர்கள். இலங்கையைப் பொறுத்தவரை வந்தேறிகள் சிங்களர்கள்தான். ஒருவேளை இந்தியாவிலிருந்து போனவர்கள் என்பதால்தான் சிங்களர்கள் மீது இந்திய அரசு இவ்வளவு பாசம் காட்டுகிறதா... தமிழர்களை இரண்டாம் தரமாக நினைக்கிறதா...

ஈழத் தமிழர்கள் ஆயுதமேந்தியது வேறு வழியே இல்லாத்தால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். காட்டில் கொடிய மிருகங்களுக்கும் பாம்புகளுக்கும் மத்தியில் துப்பாக்கியோடு ஈழ மக்கள் அலைந்து கொண்டிருப்பதை பிக்னிக் என்று நினைத்துவிட்டீர்களா... அவர்கள் புலம் பெயர்ந்து எங்கோ அவதிப்பட்டுக் கொண்டிருப்பது இஷ்டப்பட்டா... நியாயமாகக் கேட்ட உரிமைகளைத் தரமறுத்த போது போராட்டத்தில் குதித்ததில் என்ன தவறு?

உலகில் யூதர்களை விட அறிவில் மேம்பட்டவர்கள் தமிழர்கள். குறிப்பாகத ஈழத் தமிழர்கள். அவர்கள் இன்று படும் கஷ்டங்களை, வலிகளை தங்கள் சந்ததிகளுக்கும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாளைய சுதந்திரத்தின் அருமை அவர்களுக்கும் புரியும்.

இங்கே ஈழ மக்களுக்கு ஆதரவாக சிலர் உணர்ச்சிவசப்பட்டுக் கூட பேசலாம். ஆனால் அதற்காக கைது வரை அரசு போகக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். கைதுக்கு பயந்தவர்கள் அல்ல நாம். ஆனால் நியாயத்தை, உணர்வைக் காட்டியதற்காக கலைஞர்கள் மீது சட்டம் பாயக் கூடாது. இந்தப் போராட்டத்தை திசை திருப்ப யாரும் முயற்சிக்கக் கூடாது என்றார் சத்யராஜ்.

ராதாரவி:

ராதாரவி பேசுகையில், ராமேஸ்வரம் போராட்டத்தின் போது திரையுலகினருடன் ஏற்பட்ட உரசல்கள் குறித்து விளக்கினார். வடநாட்டு நடிகர்களை தன் படங்களில் வைத்துப் படமெடுப்பவர்கள் தமிழ் நடிகர்களின் தமிழுணர்வு குறித்துப் பேசத் தேவையில்லை என்றார் அவர்.

'எங்களைப் பொறுத்தவரை, ராமேஸ்வரம் போராட்டம் முதல்கட்டம், மனிதச் சங்கிலி இரண்டாம் கட்டம். இந்த உண்ணாவிரதம் மூன்றாம் கட்டப் போராட்டம் என்றே நினைக்கிறேன். இதை தேவையில்லாமல் பிரச்சினையாக்கி கொச்சைப்படுத்தாதீர்கள்', என்றார் ராதாரவி.

எஸ்எஸ்ஆர் பழச்சாறு கொடுத்தார்

காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த உண்ணாவிரதம், சரியாக மாலை 4 மணிக்கு முடிந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் பழம் பெரும் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+