மருது சகோதரர்கள் பேனர் கிழிப்பு-மதுரையில் பதற்றம்!
மதுரை: மருது சகோதர்களுக்கு வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறி 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி மதுரையில் ஒரு சமூகத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமாக காணப்படுகிறது.
மதுரை பைகாரா தெருவை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் மருது சகோதர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் சில இடங்களில் பேனர் வைத்திருந்தார்.
இந்த பேனரை சில விஷமிகள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர்.
இது குறித்து ஆனந்த் மதுரை ஆண்டாள்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் பைகாரா நகரை சேர்ந்த அறிவழகன், தென்றல் சிவா, ரவி உள்பட 6 பேரைக் கைது செய்தனர்.
அவர்கள் கைதுக்கு எதிர்த்து தெரிவித்த அவர்களது உறவினர்கள் இன்று காலை பைகாரா ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை - திருப்ரங்குன்றம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன், துணை கமிஷனர் ராமராஜன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு எட்டவில்லை.
மறியல் காரணமாக அப் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள் போன்றவைகள் அடைக்கப்படிருந்தன. சில பள்ளிகள் குழந்தைகளை அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பியது.
நிலமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவித்தனர். இதனால் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக மதுரையில் பதட்டம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications