சபரிமலைக்கு 210 சிறப்பு ரயில்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நாடு முழுதிலுமிருந்து 210 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சபரி மலை சீசன் 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக மும்பை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரன் தலைமையில் நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சீசனில் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அரவணை டோக்கன் ரூ.50!:
நடை திறக்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் முயற்சியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இறங்கியுள்ளது.
கடந்த வருடம் அரவணை பிரசாத விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள தனலட்சுமி வங்கி கிளைகளில் அரவணை பிரசாத கூப்பன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன்கள் வரும் 7-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும். ரூ.50 செலுத்தி இந்த டோக்கனை வாங்கி, சபரிமலையில் உள்ள கவுண்டர்களில் கொடுத்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications